ஸ்கூட்டர்... சைக்கிள்... இப்போ டிராக்டர்... திடீர் விவசாயி அவதாரம் எடுத்த ஸ்டாலின்
சிவகங்கை: மக்களை சந்திக்க ஸ்கூட்டர், சைக்கிளில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கரும்புக்காட்டில் டிராக்டர் ஓட்டி விவசாயிகளை அசத்தினார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போகுமிடம் எங்கும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
10ம் நாளான நேற்று சிவகங்கை மாவட்ட மக்களை சந்தித்து ஸ்டாலின் குறை கேட்டார். காரைக்குடி சென்ற ஸ்டாலின் வழிநெடுகிலும் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.
காரைக்குடியில் ஸ்டாலின்
காரைக்குடியில் வணிகர்களை சந்தித்து உரையாடிய ஸ்டாலின் வணிகவரி கட்டணங்கள் குறித்து கேட்டார். அதிமுக ஆட்சியில் வணிகவரி பலமடங்கு உயர்த்தப்பட்டு விட்டதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.பின்னர் அங்கிருந்து கொப்புடையம்மன் கோயில் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார். திமுகவுக்கு ஆதரவு அளியுங்கள். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட அவலங்கள் அகற்றப்படும், என ஸ்டாலின் உறுதி அளித்தார்.
கரும்பு தோட்டத்தில்
காரைக்குடியில் இருந்து கல்லல் சென்றார். அங்கு மக்களை சந்தித்து விட்டு சொக்கநாதபுரம் சென்று கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்கள் ஸ்டாலினிடம், கரும்புக்கு நிர்ணயம் செய்துள்ள விலை கட்டுபடியாகவில்லை என்றும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் புகார் கூறினர். திமுக ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் இன்னல்கள் துடைக்கப்படும், என ஸ்டாலின் உறுதி அளித்தார்.
டிராக்டர் ஓட்டிய ஸ்டாலின்
கரும்புக்காட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்து ஓட்டினார் ஸ்டாலின், அப்போது அங்கிருந்த விவசாயிகள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஸ்டாலினிடம் பேசிய விவசாயிகள், வைகை ஆற்று நீர் கடலில் கலக்காமல் இருக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
திமுக ஆட்சி மலரும்
சொட்டுநீர் பாசனத்துக்கான மானியம் முழுமையாக கிடைப்பதில்லை எனவும், வேலையாள் பற்றாக்குறை, விலையின்மை போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் பல ஆண்டுகளாக விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். அப்போது ஸ்டாலின் திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் அப்போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.