எம்.எஸ்.விக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும்: ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை
சென்னை : இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக, மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது: எம்.எஸ்.வி.யின் மறைவு, ஈடுகட்டமுடியாத பேரிழப்பு. எம்.எஸ்.வி.யின் மறைவு செய்தி, கருணாநிதியை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக, மணிமண்டபம் கட்ட வேண்டும் மற்றும் மத்திய அரசு, எம்.எஸ்.வி.யை கவுரவிக்கும் பொருட்டு, தபால்தலை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதைபதைக்கிறது நெஞ்சம் பாடிக்கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சு உறுதி வேண்டும்.
அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்பதாருக்கும் இறைவன் அருள வேண்டும். இசைத்துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்த துறையில் பல இளைய தலைமுறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.