கருத்தடை ஆபரேசன் செய்து இறப்போர் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு முதலிடம்
சென்னை: கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளும் பெண்கள் இறந்துபோகும் சம்பவங்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் நடப்பதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரம் அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை ஆபரேசன் செய்த பெண்கள் பலர் மரணமடைந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. ஆனால் நாட்டிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான் என்பது அதிர்ச்சியான சோகமே.
சுகாதாரத்துறையில் மேம்பட்டு உள்ளதாக மார்தட்டும் தமிழகம், கருத்தடை செய்யும் பெண்களின் உயிரை காப்பாற்ற தவறி வருகிறது என்பது நிதர்சனம். மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 2008-2012 வரையில் 130க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை செய்து கொண்டதால் மரணமடைந்துள்ளதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புறங்கள் பெருகிவிட்ட நிலையிலும், கருத்தடை ஆபரேசன்களால் பெண்கள் அதிகம் இறந்துபோக இரு காரணங்கள் கூறப்படுகிறது. கருத்தடை ஆபரேசனில் இறந்தவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கணக்கெடுக்கும் முறை வித்தியாசமானது. அதாவது, கருத்தடை ஆபரேசனால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரண தொகை வழங்கினால்தான் அதை கருத்தடை ஆபரேசனால் நிகழ்ந்த மரணம் என்று மத்திய சுகாதாரத்துறை கணக்கெடுக்கிறது.
அப்படிப்பார்த்தால், பிற மாநிலங்களைவிட தமிழகம் அதி விரைவாக நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு அளித்துவிடுகிறது. பல மாநிலங்கள் அப்படி செய்வதில்லை, அல்லது பல ஆண்டுகள் கழித்து அந்த தொகையை அளிக்கின்றன. இதுவும் தமிழகத்தில் கருத்தடை சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட காரணமாக இருக்க கூடும்.
மற்றொரு காரணம், தமிழகத்தில் கருத்தடை செய்துகொள்வது பெரும்பாலும் பெண்கள்தான். அதாவது, கருத்தடை ஆபரேசன் செய்வோரில் 99.4 சதவீதம் பெண்கள்தான். ஆண்களுக்கான கருத்தடை முறையைவிட பெண்களுக்கானது கொஞ்சம் சிக்கல் நிறைந்தது என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
2010-11ல் 41 பேரும், அதற்கடுத்த ஆண்டில் 29 பேரும், 2012-13ல் 5 பேரும் கருத்தடை ஆபரேசனின்போது தமிழகத்தில் இறந்துள்ளனர். அதேபோல 2010-11ல் 318 பேருக்கும், அதற்கடுத்த ஆண்டில் 297 பேருக்கும் கருத்தடை ஆபரேசன் பலனளிக்காமல் போயுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கருத்தடை ஆபரேசன் பாதிப்பாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள நிவாரண தொகை ரூ.3.2 கோடிகளாகும்.