தற்கொலை செய்த மாணவர்.. செல்போனில் மரண வாக்குமூலம்.. சென்னையில் பரபரப்பு!
சென்னை: சென்னை கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன், செல்போனில் பதிவு செய்துள்ள மரண வாக்கு மூலம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்த கடையம் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரது இளைய மகன் கார்த்திக். இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அமிர்தா ஓட்டல் மேலாண்மை கல்லூரியில் காய்கறிகளில் சிற்பங்கள் வடிவமைக்கும் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் கார்த்திக் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் காவல்துறையினர், தற்கொலை செய்து கொள்ள யார் காரணம் ? என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்
இந்த நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றிய பொருட்களை பிப்ரவரி 23 ஆம் தேதி பெற்றுக்கொண்ட மாணவனின் தந்தை கண்ணன், கார்த்திக் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த போது அதில் மாணவனின் குரல் மரண வாக்குமூலமாக பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.
தனது மரணத்துக்கு என்ன காரணம் என்று தெரிவிக்காத கார்த்திக் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று தனது அறையில் தங்கி உள்ள 7 மாணவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தான்.
இதுகுறித்து கார்த்திக் பிரபுவின் தந்தை துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மேலும் மகனின் மரண வாக்குமூலமான ‘வாய்ஸ் ரெக்கார்டை'யும் கொடுத்தார். ஆனால் இதுவரை புகார் கூறப்பட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே மாணவர் கார்த்திக் பிரபுவின் மரண வாக்குமூலம் மற்றும் அவரது தந்தையின் கோரிக்கை வாட்ஸ்-அப் மூலம் பரவி வருகிறது. இதனை கார்த்திக் பிரபுவின் தந்தையே பரப்பி வருகிறார்.
எனது மகனின் கடைசி ஆசையான அவரது சாவுக்கு நீதி வேண்டும். 7 மாணவர்கள் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கூலி வேலை செய்து வரும் என்னால் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட முடியாது. கார்த்திக் பிரபுவின் மரண வாக்குமூலம் வாய்ஸ் ரெக்கார்டை கடந்த பிப்ரவரி மாதமே போலீசிடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனை மற்றவர்களிடம் பகிரவும் எனது மகன் போல் வேறு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் இறந்து 2 மாதமான நிலையிலும் வழக்கம் போல இந்த வழக்கையும் காவல்துறை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் சம்பந்தப்பட்ட கல்லூரியின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து வழக்கை தொடர்ந்து விசாரிக்க வில்லை என்றும் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவனின் தற்கொலைக்கு காரணமானவர்களாக கூறப்படும் மாணவர்கள் மூலம் கார்த்திக் என்ன தொல்லைக்கு ஆளானார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை.