இனி 10, +2 தனித் தேர்வுக்கு “தட்கல்” முறையில் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் தட்கல் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்த மாதம் பிளஸ்-2 தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
இந்த மாத எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையத்திற்கு 10 மற்றும் 11-ந்தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தலா இரு தேர்வு மையங்கள் வீதம் அமைக்கப்படும்.
பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய இரு தேர்வுகளுக்கும் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.