மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனை தேவை - மனஅழுத்த ஆலோசகர் கிருஷ்ணா சுரேஷ்
சென்னை: மாணவர்களை மன அழுத்ததிலிருந்து பாதுகாக்க, தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்று மன அழுத்த மேலாண்மை ஆலோசகரான கிருஷ்ணா சுரேஷ் என்.எல்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "4400 மேற்பட்ட மாணவர்கள் IIT மற்றும் NIIT இல் இருந்து கடந்த மூன்று வருடங்களில் படித்து முடிக்க இயலாத மன அழுத்தத்தால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வெளி வந்துளார்கள் என்று அரசு தரப்பில் கூறபடுகிறது.
2012-13 முதல் 2014-15 வரை IIT கல்வி நிறுவனத்திலிருந்து 2060 மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வெளி வந்துள்ளார்கள் என்று மனித வள மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்ம்ரிதி இராணி மக்கள் அவையில் கேள்வி நேரத்தில் தெரிவித்துள்ளார்.
தொடரும் மன அழுத்தம்:
இதைத் தவிர மன அழுத்தம் தாங்காமல் பல மாணவர்கள் உயிரை விடவும் துணிகிறார்கள். அமைச்சர் குறிப்பிட்டது போல் மன அழுத்தம் பல வடிவங்களில் கருவில் இருந்தே நம்மை தொடர்கிறது.மாணவர்கள் பல சூழ்நிலையில் இருந்து உருவாக படுவதாலும்,வீட்டு வசதிகளை விட்டு விட்டு புதிய சூழலில் படிக்க வருவதாலும்,பெற்றோர்கள் மாணவர்களை கண்காணித்து கொண்டே இருப்பதாலும்,மாணவர்கள் எல்லா பணிகளையும் பெற்றவர்களை சார்ந்தே செய்வதால் தனியாக செயல் பட இயலாமல் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.வயது வித்யாசம் காரணமாக பல நுண்மையான கருத்துகளை பெற்றோர்களிடம் விவாதிக்க முடியவில்லை.
இனம் புரியாத பயம்:
மாணவர்கள் பழக்கப்பட்ட வீட்டு சூழலை விட்டு கல்வி நிறுவனங்களில் கல்லூரி செலவுகளை எதிர் கொள்ளுதல், அதிக மதிப்பெண் எடுத்தல்,பரிட்சைக்கு தயார் ஆகுதல்,வேலை தேடுதல்,சமூக வாழக்கைக்கு தயார் ஆகுதல் ஆகிய சவால்களை எதிர்கொண்டு புதிய பாதையில் புறப்படும் போது,அவர்களுக்கு இனம் தெரியாத பயமும், மன அழுத்தமும் உண்டாகிறது.சக மாணவர்களோடு சரி சமமாக படிப்பதிலும், சாதனை புரிவதிலும் பலருக்கு மன அழுத்தம் உண்டாகிறது.
குறைகளைக் கேட்க ஆளில்லை:
கல்வி மற்றும் மொழி புரியாமை, பிற மாணவர்களுக்கு இணையாக படிக்க இயலாமை, குடும்ப பிரச்சனைகள், பிறர் தம்மை கேலி செய்வது, உடல் மற்றும் மன நல பாதிப்பு, முடியாவிட்டாலும் பிறருக்கு இணையாக போட்டி போட நினைப்பது இவற்றால் மாணவர்கள் வழி தவறி குறைகளை கேட்க ஆள் இல்லாமல் பாதியிலே படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
கவனிப்பும், ஆலோசனையும்:
ஒரு விஷயத்தை பற்றி நினைப்பது ,உணர்வது ,செயல்படுத்துவது ஆகிய மூன்றுமே மன அழுத்தத்தை உண்டு பண்ண கூடிய காரணிகள். மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் உணர்வுகளை சரி வர கையாள இயலாமல் அதனால் அதிக தூக்கம் அல்லது தூக்கம் இன்மை போன்ற செயல் குறைபாடுகளில் சிக்கிக்கொண்டு வெளி வர இயலாமல் தவிக்கிறார்கள். கவனிப்பும்,ஆலோசனையும் இம்மாணவர்களை கவலையில் இருந்து விடுவித்து தன்னம்பிக்கை ஊட்டுகிறது.
உணர்வு பூர்வமான யுக்திகள் தேவை:
மனநல மற்றும் உணர்வு பூர்வமான யுக்திகளை கையாண்டு மாணவர்களுக்கு ஆறுதல் வழங்கி அவர்களை இயல்பாக செயல்பட ஊக்குவிக்கலாம். IIT (Roorkee),நல்ல மதிப்பெண் எடுக்காத மாணவர்களை வெளியேற்றி பின்னர் நீதி மன்ற உத்தரவின் படி சேர்த்துக்கொண்டது.
குடும்பத்தினர் அரவணைப்பும், ஆலோசனையும் தேவை:
இது போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தனி பட்ட ஆலோசனை வழங்கலாம். மாணவர்களின் குடும்பங்களும் இதற்கு துணை நிற்கவேண்டும்.மனஅழுத்த மற்றும் உணர்வு ரீதியான ஆலோசனைகள் மூலம் மாணவர்கள் சிறப்பாக செயல் பட இயலும்.
அப்துல் கலாம் வழிப்படி:
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலம் என்று கூறியுள்ளார். எனவே மாணவர்களுக்கு நாம் ஆலோசனை வழங்குவோம், ஆறுதல் அளிப்போம் ,அரவணைப்போம்,வழிகாட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.