காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் நடத்திய நீயா நானா நிகழ்ச்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 15.07.2017) மதியம் 3.00 மணியளவில் காமராஜரின் பிறந்த நாள் விழாவானது, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் இன்னிசை கச்சேரியுடன் விழா ஆரம்பித்தது. தெக்கூர் SSA கல்லூரி முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் காமராஜர் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விழாவில் மாணவர்கள் நடத்திய நீயா நானா நிகழ்ச்சி அனைவரின் பாராட்டை பெற்றது.
நீயா நானாவில் மாணவர்களிடம் கண்டிப்பு காட்டுவது மனச்சோர்வை தருகிறதா?, இல்லை மனஅழுத்தத்தை தருகிறதா? என்ற தலைப்பில் விவாதம் செய்தனர். மாணவர் பிரேம் குமார் ஆங்கிலத்திலும், மாணவி ஸ்வேதா தமிழிலும் காமராஜரின் சாதனைகளைப் பற்றி பேசினார்கள்.
காமராஜர் அவர்களின் அனைவருக்கும் இலவச கல்வித் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச சீருடைத் திட்டம் பற்றி மாணவர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர். காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் பாட்டு, நடனம், பேச்சு மூலம் காமராஜரின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கினர். பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.