மீனவர் விவகாரம்.. திருச்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கருப்புக் கொடி
திருச்சி: தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதைக் கண்டித்து திருச்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் கருப்புக் கொடி காட்டினர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இன்று பகல் வந்துகொண்டிருந்தார்.
பகல் சுமார் 1.50 மணியளவில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, திருச்சி சட்டக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து உளவுத்துறை போலீசார், சிதம்பரத்தை வேறு வழியாக மன்னார்புரம் சர்க்கியூட் ஹவுஸுக்கு அழைத்து சென்றனர். சிதம்பரத்துக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மாணவர்களையும் கைது செய்தனர்.