நெல்லையில் திடீர் மழை... மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை: நெல்லையில் நேற்று திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கோடை வெயில் போன்று சூரியன் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே தலை காட்டவே அஞ்சும் சூழல் காணப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கடைவீதிகளுக்குச் செல்லக் கூட மாலை நேரத்தையே அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், பகல் நேரங்களில் துணி மற்றும் பலகாரக் கடைகளில் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது.
தென் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகே தொடங்கும். இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இது அந்தமான் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் வலுவிழந்த ஆந்திரா அருகே விசாகப்பட்டிணத்தில் வரும் 12ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நெல்லையில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது.
மாலை நிலவரப்படி பாளையங்கோட்டையில் 14.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 58.05, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 78.58, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 68.65 அடியாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications