''தமிழகத்தில் கொளுத்துது கோடை வெயில்”- அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே 100 டிகிரி…
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. 5 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் மட்டும்லலாமல், குளிர்ச்சிக்கு பெயர் போன பெங்களூரிலும் கூட வெயில் கடுமையாக இருக்கிறதாம்.
உலக அழிவு என்பது இதுபோன்ற இயற்கை மாறுபாடுகளால்தானோ என்னவோ என்று நம்ப வேண்டியுள்ளது.
அக்னி நட்சத்திரம்:
ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் மே மாதத்தில் தான் தொடங்குகிறது. ஆனால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில் இப்போதே வெயிலின் உக்கிரம் அதிகரித்துவிட்டது.
வெயிலில் வேகும் நகரங்கள்:
மதுரை, திருச்சி, வேலூர், சேலம், தர்மபுரி ஆகிய 5 நகரங்களில் வெயில் கிட்டதட்ட 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகின்றது.
வெயில் தாக்கத்தின் அளவுகள்:
முக்கிய நகரங்களில் நேற்றைய வெய்யில் அளவுகள்," சென்னை நுங்கம்பாக்கம் 94.28 டிகிரி, சென்னை விமான நிலையம் 96.44 டிகிரி, கோயம்புத்தூர் 98.6, கடலூர் 92.84, தர்மபுரி 101.3 டிகிரி, கன்னியாகுமரி 93.74 டிகிரி, காரைக்கால் 91.94 டிகிரி, கொடைக்கானல் 69.26 டிகிரி, மதுரை 100.76, நாகப்பட்டினம் 93.02 டிகிரி, பாளையம்கோட்டை 99.5 டிகிரி, புதுச்சேரி 91.4 டிகிரி, சேலம் 101.12 டிகிரி, திருச்சி 102 டிகிரி, தூத்துக்குடி 92.3 டிகிரி, வால்பாறை 86.9 டிகிரி, வேலூர் 100.76 டிகிரி" ஆக இருந்தது.
மின்வெட்டு பிரச்சினை:
வெயிலின் தாக்கம்தான் அதிகரித்து மக்களை வாட்டுகிறது என்றால், மின்சார தட்டுப்பாடு ஒருபக்கம் மக்களை கொலையாய் கொல்கிறது.காற்றாலை உற்பத்தி பாதிப்பு என்ற சாக்கில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.