வேலைகள் சுறுசுறுப்பு: டிசம்பருக்குள் புதிய தலைமை செயலக கட்டடத்தில் மருத்துவமனை
சென்னை: புதிய தலைமை செயலக கட்டடத்தில் டிசம்பர் மாதத்தில் மருத்துவமனை செயல்படும் விதத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.450 கோடியில் 6 மாடி கொண்ட புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு, சட்டசபை கூட்டத் தொடரும் நடந்தது.
2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும், 'இந்த கட்டடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதாக' அறிவித்தார்.
கிரீன் சிக்னல்
இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், 'மருத்துவமனையாக மாற்ற தடை இல்லை' என்று நீதிமன்றம் அறிவித்தது. பசுமை தீர்ப்பாயமும் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
இதையடுத்து, புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் பணி பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்குள்ள சிறிய ‘லிப்டுகளை‘ எடுத்துவிட்டு ‘ஸ்டிரெச்சர்' கொண்டு செல்லும் வகையில் பெரிய லிப்டு அமைப்பது, ஒவ்வொரு தளத்தையும் பெரிய வார்டாக மாற்றுவது, ‘வீல் சேர்' கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு மாடிக்கும் சாய்வு தளம் உருவாக்குவது, 500 கழிவறைகள் அமைப்பது என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
எமர்ஜென்சி ஆபரேசன் தியேட்டர்
1 மற்றும் 2வது மாடிகளில் 2 எமர்ஜென்சி ஆபரேஷன் தியேட்டர், 5, 6-வது தளங்களில் 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் புதிய தலைமை செயலக கட்டடத்தில் மருத்துவமனை செயல்படும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 150 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய உபகரணங்கள்
ரூ.26 கோடியில் கட்டடத்தை மாற்றியமைக்கும் பணி நடந்து முடிந்ததும், ரூ.76 கோடி செலவில் மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், வாங்கப்பட உள்ளன.
நவீன ஸ்கேன் வசதிகள்
ஆபரேஷன் தியேட்டருக்கான கருவிகள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. கருவிகள், ஏ.சி மெஷின்கள், 400 படுக்கைகள் என அனைத்தும் புதிதாக வாங்கப்படுகின்றன.
மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகளும் இங்கு விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.