வைகோ நல்லவர், அவர் நாடாளுமன்றம் போக வேண்டும், ஆதரியுங்கள்... ராம் ஜெத்மலானி
விருதுநகர்: மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரிக்க வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும், 3 தமிழர்களைத் தூக்கிலிருந்து விடுதலை பெற பாடுபட்டவருமான ராம்ஜேத்மலானி கோரியுள்ளார்.
வைகோவை ஆதரித்து, விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் வைகோவைப் புகழ்ந்தும், அவருக்கு ஆதரவு தர வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசினார்.
ஜெத்மலானி பேச்சிலிருந்து...
நேரு, இந்திரா, சாஸ்திரி
நேரு, இந்திரா போன்ற தலைவர்கள் உறுதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள் அல்ல. லால்பகதுார் சாஸ்திரி தவிர மற்றவர்கள் நல்லாட்சி தரவில்லை.
வைகோ நல்லவர்
வைகோ போன்ற நல்ல தலைவர்கள் நாடாளுமனறத்துக்குச் செல்ல வேண்டும். ஊழலற்ற ஆட்சி கிடைக்க, வைகோவை ஆதரிக்க வேண்டும் என்றார் ஜெத்மலானி.
மோடி நேர்மையானவர்
முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் ராம் ஜெத்மலானி பேசுகையில், குஜராத்தில் அனைத்து முஸ்லிம் இனத்தவரும் சிறந்த கல்வியை பெற மோடி வழி வகுத்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். நேர்மையானவர்.
மோடி போன்றவர் வைகோ
மோடியைபோல் நேர்மையும், தைரியமும் கொண்டவர் வைகோ. அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன்.
பாஜகவை ஆதரிக்கவும் தயார்
பாரதீய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வைகோ முயற்சி செய்தார், ஆனால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டு, தான் முயற்சி எடுத்ததுபோல் காட்டிக்கொண்டார்.
கருப்புப் பணம்
நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் 70 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். தேர்தல் கமிஷனும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார் அவர்..