கவுண்டவுன் ஸ்டார்ட்... அதிமுக ஆட்சியை கேப்டன் இறக்குவார்: சுதீஷ் சபதம்
காஞ்சிபுரம்: அதிமுக ஆட்சிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது... இன்றிலிருந்து 90வது நாளில் அதிமுக ஆட்சியை கீழே இறக்குவார் நம் கேப்டன் என்று வேடலில் நடைபெற்ற மாநாட்டில் சபதம் போட்டார் தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ்.
தேமுதிக மாநாட்டில் அதிகம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் இரண்டு நிமிடம் மட்டுமே பேசி குட்டி கதை சொல்லி முடித்துக்கொண்டது இளைஞரணியினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் காஞ்சிபுரம் வேடல் பகுதியில் தே.மு.தி.க.வின் அரசியல் திருப்பு முனை நடைபெற்றது. மாநாட்டுக்காக 300 அடி அகலத்தில் 40 அடி நீளத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேடைக்கு அண்ணா அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்கியது.
வரவேற்புரையைத் தொடர்ந்து நட்சத்திர பேச்சாளர்கள் உரையாற்றினர் மகளிர் அணியைச் சேர்ந்தவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் பேசி முடிக்க, மைக் பிடித்தார் தேமுதிகவின் இளைஞரணி செயலாளர் சுதீஷ். பெரிதாக பேசுவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் குட்டி கதை மட்டுமே சொல்லி முடித்துக்கொண்டார் சுதீஷ்.
அதிமுக ஆட்சிக்கு வர கேப்டன்தான் காரணம் என்று கூறிய சுதீஷ், தேர்தலுக்கு இன்னும் 90 நாள் இருக்கிறது. இன்றிருந்து அதிமுக ஆட்சிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றார். இந்த நாளில் இருந்து அதிமுக ஆட்சியை இறக்குவதற்கான கேப்டன் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றும் சுதீஷ் தெரிவித்தார்.
2011 அதிமுக ஆட்சிக்கு வந்ததே கேப்டன் போட்ட பிச்சை என்று கூறியவர் குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார். கேப்டன் கையில் இருந்த வேல்... எல்லோரும் சொன்னதை வைத்து ஐயோ பாவம் என்று அந்த அம்மா கையில் கொடுத்தனர். ஆனால் எல்லாம் போயஸ்கார்டனில் போய்விட்டது.
இந்த முறை மீண்டும் வேல் நம்ம கேப்டன் கையில் வந்திருக்கிறது. அதை சரியா பயன்படுத்தனும் என்று கூறி உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டார் சுதீஷ். நட்சத்திர பேச்சாளர்கள், சுதீஷ், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் பேசி முடிக்கும் வரை கட்சித்தலைவர் விஜயகாந்த் மேடைக்கு வரவேயில்லை.