புழல் சிறையில் ராம்குமாரை வீடியோ எடுக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: ராம்குமாரை மாதிரி வீடியோ பதிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் ராம்குமாரை வீடியோ பதிவு எடுக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 நாள் போலீ்ஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ராம்குமாரை, சம்பவம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட முந்தைய வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக மீண்டும் அதேபோன்று வீடியோ பதிவு செய்ய அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஆகஸ்டு 8ம் தேதி வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.
அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், ராம்குமாரிடம் ஏற்கெனவே 3 நாட்கள் போலீஸார் போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர். தற்போது அந்த 3 நாளில் போலீசார் ஜோடித்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே, மீண்டும் அவரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசார் அனுமதி கோருகின்றனர். அதற்கு எழும்பூர் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.
இது சட்டவிரோதமானது. அதுவும் தற்போது சிறைக்குள் வைத்தே வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோருவதால் சுவாதி கொலையில் எல்லா பழியையும் ராம்குமார் மீது சுமத்த திட்டமிட்டுள்ளனர் என்றார். அரசு தரப்பில், இந்த வீடியோ பதிவு, வழக்குக்கு தேவையான ஒன்றுதான் என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராம்குமாரை விடியோ பதிவு செய்ய அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்தது. மேலும், ராம்குமாரை காவல்துறையினர் விடியோ பதிவு எடுத்து ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.