சென்னையின் 3வது ரயில் முனையமாக அடுத்த வருடத்திற்குள் தாம்பரம் உருவாகும்: அதிகாரி பேட்டி
சென்னை: சென்னையின் 3வது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் அடுத்த ஆண்டிற்குள் செயல்பட தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டா ஹோக்ரி தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில், பங்கேற்ற தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டா ஹோக்ரி நிருபர்களிடம் கூறியது:
செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணி முடிந்துள்ளதால் தென் மாவட்டங்களுக்கு, கூடுதல் ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே 3வது அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டிற்குள் தாம்பரம், சென்னையின் புதிய ரயில் முனையமாகும். தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்பட்டு செல்வது குறித்து, ரயில்வே வாரியம்தான் முடிவை அறிவிக்க வேண்டும். ராயபுரத்தை ரயில் முனையமாக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. மேலும், தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.