மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: எச்.ராஜா
புதுக்கோட்டை: பிரதமர் நரேந்திரமோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும்போது தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா இலங்கையில் சிறிசேனா அரசு பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியா வருவதற்கு முன்பு இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ததோடு அவர்களின் படகுகளையும் விடுவித்தது.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் இரு நாட்டு மீனவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 86 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில விடுதலை செய்யப்படுவார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்ல உள்ளார். அதன் பின்னர் பிரதமர் மோடி இலங்கைக்கு செல்ல உள்ளார். அவர்கள் செல்லும் போது மீனவர்களின் பிரச்சனை குறித்து பேசப்பட்டு இரு நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மின்பிடிக்க ஏதுவாக சூழ்நிலை ஏற்படுவதோடு அவர்களின் பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும். அதுவரை தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது இருநாட்டு நல்லுறவையும் பாதிக்காதவாறு மீன்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மத்திய அரசின் பட்ஜெட் மூலமாக, விலைவாசி கட்டுக்குள் இருக்கும். பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்திற்கு உயரும். சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக 20ஆயிரம் கோடி ருபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வை பொறுத்தே நேற்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்துள்ளதால் விலைவாசி உயரும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
2016ம் ஆண்டு தேர்தலில் பாஜக அப்போதைய சூழ்நிலை பொறுத்து முடிவுகளை அறிவிக்கும். மேலும் டெல்லி தேர்தல் முடிவால் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. காங்கிரசின் வாக்குகளை தான் ஆம்ஆத்மி வாங்கியுள்ளதே தவிர பாஜகவின் வாக்குகளை அல்ல. இருப்பினும் தோல்விக்கான காரணம் குறித்து பாஜக ஆராய்ந்து பல முடிவுகளை எடுக்கும் என்றார்.