விநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்- சிறப்பு வழிபாடு
சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில், விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதுடன், விநாயகப் பெருமானின் பல்வேறு தோற்றங்கள் கொண்ட சிலைகளை அவரவர் தகுதிக்கேற்ப பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
மேலும் விநாயகருக்குப் பிடித்த அவல், பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு, சோளம் மற்றும் பழ வகைகள் வைத்து படையலிட்டு அவரது அருளை பெறுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று காலை முதலே கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கற்பக விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மணக்குள விநாயகர்
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மெகா கொழுக்கட்டை
இதற்காக புதன்கிழமை பிற்பகலில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட தொடங்கினர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து நேற்று காலை வரை தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தனர்.

மாணிக்க விநாயகர்
இன்று காலை 9.35 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து வரப்பட்டது. இதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அலங்கார கணபதி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 11-ஆம் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் காட்சி அளிக்கிறார்.

விநாயகர் சிலைகள்
சென்னையில் பெரும்பாலான தெரு முனைகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications