கூட்டணி குறித்து கட்சி தலைமை இறுதி முடிவெடுக்கும்: ஜி.கே.வாசன் தகவல்
சென்னை: லோக்சபா தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரஸ் தயாராக இருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ராணுவத்தால் ‘சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவித்தால் மட்டுமே இலங்கையுடன் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்துவோம்' என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-
தமிழக மீனவர்களின் பிரச்சினையை பொறுத்தவரை அது அவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்புடையது என்பதால் மனிதாபிமான அடிப்படையில்தான் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பிரதமர் மன்மோகன் சிங் மியான்மார் நாட்டில் சந்தித்து பேசினார்.
ஆனால் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் சிறைபிடித்து வருகிறது. மேலும் இலங்கை அரசு சிறைபிடித்து வைத்துள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்தால் மட்டுமே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடியும்' என்றார்.
மேலும், லோக்சபா தேர்தல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தமிழகத்தில் கூட்டணிகள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சி தலைமை இறுதி முடிவெடுக்கும்.
அதே சமயம் தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரஸ் தயார் நிலையிலேயே இருக்கிறது என்றார்.