அடடா... மழையுடன் ஆரம்பித்த 'கத்திரி'!
சென்னை: கத்திரி வெய்யில் எப்படியெல்லாம் மண்டையைப் பிளக்கப் போகிறதோ என்ற தவிப்போடு வானத்தைப் பார்த்திருந்தவர்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கோடை மழை!
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் கோடையின் உச்சகட்டம் நேற்று தொடங்கியது.
கத்திரிக்கு முந்தைய நாள்கூட வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளைத் தவிர. எனவே கத்திரியன்று எப்படியிருக்குமோ என பயந்து கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஆறுதல் அளிப்பதுபோல, வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்தது. சில இடங்களில் மழையும் பெய்தது.
அதிகாலை முதலே...
இன்று அதிகாலையிலிருந்தே மழை கொட்ட ஆரம்பித்தது. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் மிதமாக ஆரம்பித்து, வலுவாகப் பெய்ய ஆரம்பித்தது.
கடலூர்
கடலூரில் நேற்று காலையிலிருந்தே மழை விட்டுவிட்டுப் பெய்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 17.3 மில்லி மீட்டர் மழை இங்கு பதிவானது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் ஓரளவு தணிந்தது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கோடை மழை பெய்தது. பண்ருட்டியில் காலை 8 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென பலத்த மழை பெய்தது.
சேலத்தில் லேசான மழை
நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் சேலத்தில் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், திருச்சி ரோடு, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை 10 முதல் 15 நிமிடம் மட்டுமே நீடித்தது. இன்றும் காலையில் மழை பெய்தது.
குற்றாலத்தில்
நெல்லையில் நேற்று மாலையிலிருந்தே நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் சில நிமிடங்கள் சாரல் மழை பொழிந்தது.
நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அருவியில் தண்ணீர் விழ ஆரம்பித்துள்ளது.
செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடியில்
தூத்துக்குடியில் பிற்பகலில் கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்தது. சுற்றுப்புறப் பகுதிகளிலும் நல்ல மழை.
குமரி மாவட்டம்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. நேற்று பிற்பகல் பெய்யத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
இதே போல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், குருந்தன்கோடு, வெள்ளிமலை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு பகுதியில் அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.