தமிழக, கேரளா பாதை- 29 ஆம் தேதி முதல் புதிய பாலப்பணிக்களுக்காக மூடல்!
செங்கோட்டை: தமிழக கேரளா சாலை வரும் 29ஆம் தேதி முதல் புதிய பால வேலைகளுக்காக மூடப்படுகிறது.
தமிழக, கேரள எல்லை பகுதி செங்கோட்டை -புனலூர் இடையே அகலரயில் பாதை அமைக்கும் பணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்பாதையில் 110ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது ரயில்வே அதிகாரிகள் தரப்பில் 2013 இல் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் பயணம் தொடங்கும் என்று தெரிவித்தனர்.ஆனால் 3ஆண்டு முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த தடத்தில் 25சதவிகித பணிகள் கூட முடியவில்லை.
இந்த பணியால் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்களை ஏற்ப்படுத்தி பலமணி நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்ப்படுத்திய ஆரியங்காவு ரயில்வே பாலத்தை சரிபார்க்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இப்பணியை தொடங்கினர்.
தற்போதைய பாலத்தை இடிக்காமல் புதிய பாலத்தை கட்டினர்.தற்போது பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் வழியாக போக்குவரத்தை சரிப்படுத்த பணிகள் நடைப்பெற்றுவரும் நிலையில் முக்கிய பாதையான இந்த பாதையை அடைத்தால்தான் புதிய பாலத்தின் பணியை தொடர்ந்து முடிக்க முடியும்.
இந்த பாலத்தை உடைத்து புதிய பாலத்தை கான்கீரிட் போட்டு தளம் அமைக்க சுமார் 10நாட்கள் ஆகும் என்பதால் தென்னக ரயில்வேயின் மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு 25 ஆம் தேதிமுதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை பணிகள் தொடரும் 6ந் தேதிமுதல் போக்குவரத்து தொடங்கும் என்றார்.
ஆனால் வங்கக் கடலில் உருவான புயலின் காரணமாகவும்,தீபாவளி பண்டிகை நாள்கள் என்பதாலும், பலத்த மழை பெய்ததால் குறிப்பிட்ட நாளில் அடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சாலை குறித்த அதிகாரிகள் கூட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட ஆட்சியர் பொறுப்பு.உன்னி கிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,தென்னக ரயில்வேத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில் வரும் 29 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நவம்பர் 6 ஆம் தேதிகாலை 6மணிவரை புதிய பாலம் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டுமுடிக்கப்படும்.
வழக்கம் போல் வரும் நவம்பர் 6 ஆம் தேதி காலை 6 மணி முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கொல்லம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த பாதை கடந்த 1991-92ஆம் ஆண்டு புயல் வெள்ளத்தால் 25நாட்கள் மூடப்பட்டன.அதன்பின் கடந்த 2009ஆம் ஆண்டு எஸ் வளைவு பகுதியை சீரமைக்க 20நாட்கள் மூடப்பட்டன.
அதன்பின் தற்போது ரயில்வே பாலம் சீரமைக்க மூடப்படுகிறது.சபரி மலை ஐயப்பன் கோவில் சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளதால் இப்பணி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.