சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டு.. மோசமான வீடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவ மக்கள்!
சென்னை: சுனாமி பேரலை எனும் அரக்கனை நேரில் சந்தித்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய போதும் இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காரணம் அரசு கட்டிக் கொடுத்த சுனாமி மறுவாழ்வு இல்லங்கள் அவர்களுக்கு போதிய வசதியாக இல்லை என்ற குற்றச்சாட்டு தான்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சிகள் முடிவதற்கு முன்னதாகவே, கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலையில் சுனாமி பேரலைகள் தமிழகத்தின் பல கடற்கரைகளில் தனது ருத்ர தாண்டவத்தை ஆடிச் சென்றது.
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என யோசிப்பதற்கு முன்னதாகவே பலர் பேரலைகளில் சிக்கினர். இவ்வளவு பெரிய அலைகளை தங்கள் வாழ்நாளில் பார்த்திராத பேரதிர்ச்சியுடனேயே பலர் உயிரிழந்தனர்.
சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை சுனாமிக்கு பறி கொடுத்தது தமிழகம். குடும்பம், உறவுகள், நண்பர்கள், சொத்துக்கள், கனவுகள் என எல்லாவற்றையும் இழந்த மக்களுக்கு தமிழக அரசு சுனாமி மறுவாழ்வு இல்லங்களை அமைத்து கொடுத்தது.
ஆனபோதும், தொடர்ந்து சில பகுதிகளில் ஆபத்தான கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியான நாகப்பட்டிணம் அருகே அக்கரைப்பெட்டி மீனவர் கிராமத்தில் இன்னமும் கடற்கரைக்கு அருகிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
சுனாமி தாக்கிய போது 8 மாத கர்ப்பமாக இருந்தவர் சத்யா(30). தற்போது இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அரசு கட்டிக் கொடுத்த சுனாமி குடியிருப்பிற்கு மாறாமல் இன்னமும் தனது பழைய வீட்டிலேயே குடியிருக்கிறார். காரணம் கேட்டால், இந்த வீடே தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வசதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள வீடுகள் சின்னதாக, கழிவறை வசதிகள் அற்று இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், சுனாமிக்கு தனது மனைவியைப் பறி கொடுத்த அர்ஜூனன் (60) என்பவர் கூறுகையில், 'இந்த இடத்தை விட்டு எப்படி என்னால் வேறு இடத்திற்கு செல்ல முடியும். இங்குள்ளது போல் அங்கு போதிய வசதிகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்காக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் தரமற்றதாக விரிசல்கள் விழுந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக விரிசல்கள் வழியாக மழை காலத்தில் நீர் ஒழுகுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேபோல், பழவேற்காட்டில் உள்ள தாங்கல் பெரும்புலம் பகுதியில் 140 சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னமும் அந்தக் குடியிருப்புகளில் யாரும் குடியேறவில்லை.
கடலோர கிராமத்தில் வசித்து வரும் கோரைகுப்பத்தை சேர்ந்த மீனவ மக்கள் கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுனாமி குடியிருப்பு வீடுகளில் குடியேற மறுக்கின்றனர். காரணம், சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு மாறினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்களின் படகு, வலை உள்ளிட்ட பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அஞ்சுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்தாண்டு சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் சுனாமி உள்ளிட்ட பேரழிவுகளை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் பல பயன்பாட்டில் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், உலக வங்கி உதவியுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ. 1500 கோடியில் கடந்தாண்டு கடற்கரை பேரழிவு தடுப்பு திட்டம் ஒன்றையும் அறிவித்தார். ஐந்தாண்டு திட்டமான இது இன்னமும் செயல் படத் தொடங்காமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.