மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி பேச்சு: தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம்
சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார்.
சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்குமார் பழனிச்சாமி அந்நிகழ்ச்சியில் தக்க பதிலடியும் கொடுத்தார்.
மேலும், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட தேசிய மொழிகள் குறித்த அறிவும் அவருக்கு இல்லை. இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லாத நிலையில் அவர் வாய்க் கூசாமல் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்கிறார். ஆங்கிலமும் தமிழும் இரு கண்கள், இந்தி என்பது நெற்றிக் கண்ணாக இருக்கட்டும் என்று கூறுகிறார்.
தமிழ் படித்தால் எந்த வேலையும் கிடைக்காது. தமிழுக்கு எந்த உரிமையும் கிடையாது. நீதிமன்றத்தில் தமிழ் இல்லை, நாடாளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை இல்லை. அதனால் நாம் எல்லாம் இந்தி கற்றுக் கொண்டால் வடநாட்டவன் போல் செழிப்பாக வாழலாம். இல்லையெனில் வடநாட்டான் நம்மை ஏமாற்றிவிடுவான்.
வடநாட்டவன் தமிழகம் வரும்போது தமிழ் படிக்க சிரமப்படுகிறான். அதனால் தமிழ்நாட்டில் கட்டாயம் இந்தி பாடம் அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அதே போல், தமிழர்கள் வடநாடு சென்றால் அங்கு இந்தி படிக்க நேரிடும். அதனால் இங்கேயே தமிழர்கள் இந்தி படித்து வடநாடு செல்லலாம். இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தில் இந்தி பெயர் பலகை இல்லையெனில் வடநாட்டான் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகுவான்.
அதனால் இந்தியாவில் எங்கும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி மட்டும் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு செக்யூரிட்டி வேலைக்கு தான் வருகிறார்கள். இந்தி தெரிந்தால் தமிழர்கள் வடநாட்டில் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். இந்தி தெரியவில்லை என்றால் அவன் இந்தியனே இல்லை. அவனுக்கு இந்தியாவில் வாழ்த் தகுதியும் இல்லை என்று கூறி அடிப்படை மனித உரிமை, மொழி உரிமையும் மறுக்கிறார்.
இவ்வாறு பல அபத்தங்களை பேசி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக திணிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார் நந்தகுமார். இவ்வாறு கருத்து கூறிய நந்தகுமாருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது. பலரும் நந்தகுமாரை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான ஆட்கள் தமிழகத்தில் பள்ளித் தலைவர்களாக இருந்தால் மாணவர்களின் கதி என்னவாகும்? நம் மொழியின் நிலை என்னவாகும்? மாணவர்கள் எவ்வாறு வழி நடத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் பொறுப்பற்ற இந்தி வெறிப் பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.
அனைத்து மொழிகளுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே நியாயமாக இருக்க வேண்டிய தருணத்தில், ஒரு மொழியை அதுவும் அவர்கள் தாய் மொழி அல்லாத மொழியை மாணவர்கள் மீது திணிக்க வேண்டும் என்று நினைக்கும் பள்ளிகள் சங்கத் தலைவரை அத்தகைய பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் நந்தகுமாரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.