வரும் ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை உறுதி
மதுரை: வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கட்டாயமாக நடத்த பாரதிய ஜனதா கட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை, வாடிப்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் ஆண்டு ஜல்லிக்கட்டை கட்டாயமாக நடத்த பா.ஜ.க. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றவும் அரசு முயற்சித்து வருகிறது.
காவிரி விவகாரத்தில் தி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டம் இப்போதைய சூழ்நிலையில் தேவையில்லை. தமிழகத்தில் தேர்தலை நடுநிலையோடு நடத்த வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதனால் 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. 2016-ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8-ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் இதை ரத்து செய்யக்கோரி விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்குக்கு ஜனவரி 14-ந்தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று கடந்த ஜூலை மாத இறுதியில் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.