குருபூஜையை இந்துத்துவா திணிப்பு என்பதா? கனிமொழிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
சென்னை: குருக்களுக்கு பாத பூஜை செய்வதை இந்துத்துவா திணிப்பு என விமர்சித்ததற்காக திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆடி மாதம் வந்ததுமே பல இடங்களில் சாதி பிரச்சனை எழுப்பப்படுகிறது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு, தேர் இழுக்க அனுமதி மறுப்பு போன்ற செயல்கள் நடக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை பறிக்க கூடாது. இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். சில கட்சிகள் இதற்கு காரணமாக இருக்கின்றன. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ராஜ்யசபாவில் பேசிய கனிமொழி எம்பி, இந்து மதத்தில் குருவுக்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார். இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.