ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டம்! புது அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
சென்னை: 15வது சட்டசபையின் கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து 6வது முறை, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவரை தொடர்ந்து 32 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
இதன்பிறகு சட்டசபை கூடியது. அதில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து வரும் 16ம் தேதி சட்டசபை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார் இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா 16ம் தேதி உரையாற்றுவார் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக கவர்னர் ரோசய்யா இந்திய அரசியலமைப்பு பிரிவு 176 (1) ன்கீழ் சென்னை - 600009 தலைமைச்செயலக வளாகத்தில் சட்டமன்ற பேரவை மண்டபத்தில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் நாள் வியாழக்கிழமை காலை 11மணிக்கு பேரவையில் உரை நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்து கொள்கிறேன். என்று அவர் கூறியுள்ளார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது குறித்து முடிவாகும் என்று தெரிகிறது.
கவர்னர் உரையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு பெயர் பெற்ற முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் இடம்பெறும் ஆளுநர் உரை என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.