அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. கதறும் மீனவர்கள்!
அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அபாய குரல் எழுப்பியுள்ளனர்.
நாகர்கோவில்: அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அபாய குரல் எழுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாயிலிருந்து மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடல் எல்லை தாண்டியதாக ஈரான் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இவர்கள் சிறைபிடிக்கபட்டதால் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி மத்திய மாநில அரசுகளையும், ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தையும் வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பி வருகிறார்.
இந்தநிலையில் இம்மீனவர்கள் அனைவரும் ஜஸ்டின் ஆன்றனிக்கு வாட்ஸ் அப் வாயிலாக ஒரு கடிதத்தை அனுப்பி, "நாங்கள் அனைவரும் துபாய்க்கு செல்ல விரும்பவில்லை. அங்கு எங்களது உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. எங்களை இழுவை மடி தொழில் செய்ய வற்புறுத்துகிறார்கள்.
சட்டத்திற்கு புறம்பான அந்த தொழில் செய்ய நாங்கள் விரும்பவில்லை. அந்த தொழில் துபாய் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தாயகம் திரும்பாவிடில் பல உயிர்களை இழக்க நேரிடும்" என தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இம்மீனவர்கள் அனுப்பிய கடிதத்தை அனுப்பி இம்மீனவர்களை மீட்டு இந்தியா அனுப்ப ஜஸ்டின் ஆன்றனி வேண்டுகோள் வைத்துள்ளார்.