ஆட்சி நிர்வாகத்தை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
Recommended Video
சென்னை: தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இது சாதாரண விஷயம்தான் என்று, ஆளும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாக இது பல்வேறு வகையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சட்டப்படி, அரசியல் சாசனத்தின்படி, இவ்வாறு ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்று இருக்கும்போது, ஆளுநர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் சாசன பதவி
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அதன் விவரம் இதுதான்: ஒரு மாநிலத்தின் அரசியல் சாசன பாதுகாவலர் என்பர் ஆளுநர்தான். மாநிலத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை தொடர்ந்து கண்காணித்து அதை குடியரசு தலைவருக்கு அறிக்கையாக அனுப்புவது என்பது வழக்கமான ஒன்று.
கூட்டாட்சி தத்துவம்
எனவே ஆளுநர் இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யவே கூடாது என்று அரசியல் சாசனத்தில் அவருக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த ஒரு தடைகளும் இல்லை. இருப்பினும், கூட்டாட்சி தத்துவத்தை மதித்து, மாநில அரசின் நிர்வாகங்களில் ஆளுநர் தலையிடுவது இல்லை என்கிறார்கள் அந்த சட்ட வல்லுநர்கள்.
ஆளுநர்களின் தலையீடு
அதேநேரம், 1967ம் ஆண்டுவரை, ஆளுநர்களும், அரசின் நடவடிக்கைகளில் அதிகம் தலையிட்டே வந்துள்ளனர் என்பது வரலாறு. அதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மத்தியிலும் அதே கட்சி ஆட்சி. எனவே ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் சாமானியமாக கடந்து செல்லப்பட்டன. ஆளுநரை மாநிலத்திலுள்ள நிலவரத்தை மத்திக்கு எடுத்துச் சொல்லும் ரட்சகராகவே அப்போது பார்த்தனர்.
மாநில சுயாட்சி
ஆனால், அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஆளுநரின் பங்களிப்பு சுறுக்கப்பட்டது. மாநில சுயாட்சி என்ற முழக்கத்தின் அடிப்படையில் செயல்படும் கட்சி திமுக என்பதால் ஆளுநரை ஆட்சி அதிகாரத்தில், தலையிட அண்ணா முதல்வராக இருந்தபோதில் இருந்து ஜெ. முதல்வராக இருந்தது வரை, அனுமதித்தது கிடையாது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து ஆட்சி செய்தநிலையில், ஆளுநரின் பங்களிப்பு என்பது முதல்வர், அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்வது, அமைச்சர்களை நீக்குவதற்கான முதல்வரின் பரிந்துரையை ஏற்பது என்ற அளவிலேயே நின்றுபோனது.
பிற மாநிலங்கள்
அதேநேரம், தேசிய கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநரின் தலையீடு இருக்கவே செய்கிறது. கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜ் மற்றும் முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலகட்டங்களில் இதை அதிகம் காண முடிந்தது. எனவே சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தமிழக திராவிட கட்சிகளின் மரப்புகளை மீறுவதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.