இப்ப இல்ல இன்னும் என்ன நடந்தாலும் நாங்க இப்படி தான் : மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய தமிழர்கள்
நெல்லையில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவில் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Recommended Video

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த நிகழ்வில், அந்தோணியார் சப்பரத்தை ஐயப்ப பக்தர்கள் சுமந்து சென்றது மத நல்லிணக்கத்தை பறைசாற்றி உள்ளது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் கீழக்கரை கிராமத்தில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலய திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாலை சப்பர பவனி நடந்தது. இதில் மாதா, அந்தோணியர், மிக்கெல் ஆண்டவர் உருவச்சிலைகள் சப்பரங்கள் எடுத்து செல்லப்பட்டு வீதியுலா நடந்தது. இதற்கு ஊர் தலைவர் வேதமுத்து தலைமை வகித்தார்.
இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லும் சுமார் 50 ஐயப்ப பக்தர்கள் சப்பரங்களை தோளில் சுமந்தபடி வீதி வீதியாக சென்றனர்.
இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்யும்படி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தச்சநல்லூர், கீழக்கரை கிராமத்தில் தங்கள் முன்னோர் 1984ம் ஆண்டு அந்தோணியர் ஆலயத்தை கட்டினர். பூர்விக இந்துகள் எங்கள் கிராமத்தில் இருந்தாலும் ஆலயத்தை பராமரிக்கும் வகையில் நாங்கள் ஒன்று கூடியே விழாவை நடத்துகிறோம்.
கிராமத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் வாரத்தில் விரதத்தை துவங்குகின்றனர். இருப்பினும் மதம் பார்க்காது கிறிஸ்துமஸ் விழாவில் சப்பரங்களை சுமந்து செல்கின்றனர். மேலும் அங்குள்ள ஜக்கம்மா கோயிலிலும் நாங்கள் அனைவரும் ஒன்றாக வழிபாடு நடத்துகிறோம். மேலும் இந்த மத வேற்றுமைகள் எங்களை எப்போதும் பிரித்து வைத்தது இல்லை என்று பெருமையுடன் தெரிவித்தனர்.
மதத்தை முன்வைத்து இந்திய அளவில் என்ன அரசியல் நடந்தாலும், தமிழகத்திற்குள் அதை ஒருபோதும் நடக்கவிடமாட்டோம் என்பதில் தமிழர்கள் உறுதியாக இருப்பது இதுபோன்ற சம்பவங்களில் மூலம் நிரூபணம் ஆகிறது.












Click it and Unblock the Notifications