தமிழக சிறைகளில் இருந்தபடியே வெளியே 'ஆளை தூக்கும்' கிரிமினல்கள்
சென்னை: தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருந்தபடியே வெளியே குற்றச்செயல்களை நடத்தி வரும் கிரிமினல்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு கொலை, கடத்தல்களை போலீசார் முன்கூட்டியே தடுத்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
160 கொலைகள் தடுப்பு
குற்றங்களை முன்கூட்டியே தடுக்க சிறை கைதிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணிப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் கைதிகளை கண்காணித்ததன் மூலமாக தமிழகத்தில் இதுவரை 160 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
புழல் டூ நாகப்பட்டிணம்
நாகப்பட்டிணம் பகுதியில் சமீபத்தில் பணம் கேட்டு ஐந்து தொழிலதிபர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை புழல் சிறையிலுள்ள கேப்ரியல் என்ற கிரிமினலுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்தபடியே, தனது சிஷ்யர்களை வைத்து ஆள் கடத்தலில் ஈடுபடுவது கேப்ரியல் வழக்கமாம். கடத்தல் பணத்தை கேப்ரியலின் குடும்பத்தாருக்கு அடியாட்கள் பகிர்ந்து கொடுத்துவிடுவார்களாம்.
உள்ளே, வெளியே கண்காணிப்பு
மேற்கண்ட ஐந்து கடத்தல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதுபோன்றவர்களால்தான் கேப்ரியலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முடிவதில்லை. ஜெயலலிதா பேரவையில்பேசும்போது "கிரிமினல்களை கண்காணிக்க தமிழகத்தில் தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. சிறைக்கு உள்ளேயோ அல்லது ஜாமீனில் வெளியேயோ, எங்கிருந்தாலும் கிரிமினல்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
பல குற்றங்கள் தடுப்பு
இந்த கண்காணிப்பின் மூலமாக, கொலை, ஆள்கடத்தல் போன்றவை தடுக்கப்படுகின்றன. சட்ட விரோத பணத்தை பெருமளவுக்கு மீட்டுள்ளோம். 160 கொலை முயற்சி, 98 வேலைவாய்ப்பு மோசடி, 520 போதை மருந்து கடத்தல் மற்றும் ஆள்கடத்தல், 440 வெடிமருந்து கடத்தல், 2014 கள்ள நோட்டு புழக்க முயற்சி தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.