வறுத்தெடுக்கும் கோடை வெயில்: திருச்சி- 107 டிகிரி; மதுரை, வேலூர்- 105 டிகிரி!!
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடை வெயில் தனது உச்சத்தை எட்டி வருகிறது. மே மாதம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதேபோல தூத்துக்குடியில் 95 டிகிரி பாரன்ஹீட்டும், கன்னியாகுமரியில் 93.2 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைவிட உள்மாவட்டங்களிதான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியேவரமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தல பகுதிகளுக்கு அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.