நீதிமன்ற உத்தரவையடுத்து தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டமும் தற்காலிக வாபஸ்!
சென்னை: தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று, அவர்கள் அறிவித்தனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவையடுத்து அவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜாக்டோ- ஜியோ அமைப்புக்கு ஆதரவாக இன்று தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், போலீசாருடன் தலைமை செயலக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு தலைமைச் செயலகம் உள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனிடையே பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அழைப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் ஏற்க மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே மதுரை ஹைகோர்ட் கிளை கோரிக்கையை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். 21ம் தேதி தலைமைச் செயலருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதுவரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதன்பிறகு சற்று நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலக ஊழியர்கள், தாங்களும் தற்காலிகமாக வரும் வியாழக்கிழமை வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும், தலைமைச் செயலாளர் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ககலைந்து சென்றனர்.