தமிழக பந்த் : கோயம்பேடு காய்கறி சந்தை நள்ளிரவு முதல் மூடல் - வெறிச்சோடியது #TamilNaduBandh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோயம்பேடு சந்தை நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. சுமைதூக்கும் தொழிலாளர்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு காய்கறிச் சந்தை வெளிச்சோடி காணப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் நீண்ட காலமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் தமிழர்கள் வீடுகளைத் தாக்கத் தொடங்கினார்கள். மேலும், தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். கர்நாடக மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தமிழக இளைஞர் மீது கன்னட அமைப்பினர் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர்.
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து திமுக, பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், விவசாயிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. எனினும், தமிழகத்தின் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்ததுடன், காவிரி நீரை அதிகளவில் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
விவசாயிகள் அழைப்பு
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதலை கண்டித்தும், தமிழகத்துக்கு அதிகளவில் காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார். இதற்கு அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து திமுக, மதிமுக, தேமுதிக, பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து ஆதரவு கோரினார். நாளை நடைபெறும் பந்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்
முழு கடைஅடைப்பு
வணிகர்கள், லாரி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த முழு கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் துவங்கியது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பையொட்டி ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி வரை 4,600 பெட்ரோல் பங்க்கள் மூடப்படவுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு காய்கறிச் சந்தை
முழு அடைப்பின் காரணமாக கோயம்பேடு சந்தை நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. சுமைதூக்கும் தொழிலாளர்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு காய்கறிச் சந்தை வெளிச்சோடி காணப்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிவரை காய்கறி சந்தை திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய உரிமையாளர்களும் இன்றைய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 43 அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை பந்த் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த 43 பேருந்துகளும் ஆந்திர மாநிலம் தடா வழியாக கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழகம் முழுவதும் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.