500 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு: எதிர்காலத்தை நினைத்து கதறும் ஊழியர்கள்
சென்னை: தமிழக அரசு எந்த 500 டாஸ்மாக் கடைகளை மூடப் போகிறது என்றும், யார் யாருக்கு வேலை பறிபோகப் போகிறது என்றும் கவலையில் உள்ளனர் டாஸ்மாக் ஊழியர்கள்.
அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற அன்றே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைப்பது குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை என இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
மூடப்படும் கடைகள் எதுவென தெரியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் குழம்புகிறார்கள். மேலும் தங்கள் வேலை பறிபோய்விடுமே என்ற பயத்தில் உள்ளனர். கடைகளை
மூடுவதாக கூறிய அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை அளிப்பது பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லையே என அவர்கள் கலங்குகிறார்கள். டாஸ்மாக் கடைகளை நம்பி பணம் போட்டு பார்கள், சிறு ஹோட்டல்கள் வைத்தவர்களும் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுமே என புலம்புகிறார்கள். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அங்கு பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.