வைகோ அரசியலில் இருந்து விலகப் போறாரா.. எல்லாம் வெறும் வதந்தி… திருமாவளவன் அதிரடி
வைகோ அரசியலில் இருந்து விலகப் போகிறார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் வதந்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: வைகோ அரசியலில் இருந்து விலகப் போவதாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதெல்லாம் வெறும் வதந்தி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் அரசியலில் இருந்து விலகுவதாக அண்மையில் செய்தி வெளியாகி தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக எந்த வித மறுப்பை வைகோ தெரிவிக்கவில்லை.
[Read This: அரசியலிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெற வைகோ முடிவு?]
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரசியலில் இருந்து வைகோ விலகவில்லை என்றும், அவர் விலகுவதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் விவசாயத்திற்காக நிலத்தில் இருந்து எடுக்கும் நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். விவசாய நீரை மத்திய அரசு வணிகப் பொருளாக கருதுவதோ மாற்றுவதோ ஆபத்தானது என்று திருமாவளவன் கூறினார்.
இதுபோன்று விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பை ஆட்டம் காணும் செயலாக மாறிவிடும் என்றும், எனவே, மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் திருமாவளவன் கோரியுள்ளார்.