மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்...ஆதரவு கோரி கனிமொழியுடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் சந்திப்பு
தெலுங்குதேசம் கட்சியின் எம்.பிக்கள் குழு இன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தனர்.
Recommended Video
சென்னை: மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை தெலுங்குதேச எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்து வலியுறுத்தியது.
தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும்; சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதை முந்தைய மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் இதை தொடர்ந்து வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை தற்போதைய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசை தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் மாநில கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தெலுங்குதேசம் கட்சியின் வேண்டுகோள். இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் மற்றும் முரளி மோகன் ஆகியோர் அடங்கிய குழு சென்னையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தனர். அப்போது ஆந்திராவுக்கு உரிய நீதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதம் கனிமொழியிடம் கொடுக்கப்பட்டது.
TDP MPs CM Ramesh, TG Venkatesh and Murali Mohan met DMK MP Kanimozhi in #Chennai today and handed over TDP President & Andhra Pradesh CM N.Chandrababu Naidu’s letter seeking cooperation and support for TDP’s fight against the centre for justice to the state. pic.twitter.com/TvMjhPhcHZ
— ANI (@ANI) July 16, 2018
ஏற்கனவே தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். தற்போது ஆந்திரா எம்.பி.க்கள் குழு கனிமொழியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.