கைது செய்வதாக காவல்துறை எச்சரிக்கை.. உண்ணா விரதத்தை வாபஸ் பெற்ற சபரிமாலா
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன், மனைவி சபரிமாலா (35). இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றினார்.
அதே பள்ளியில் இவர்களது மகன் ஜெயசோழன் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.
மகனுடன் தர்ணா
ஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கடந்த 6ம் தேதி தனது மகனுடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜினா கடிதம்
மேலும், நேற்று முன்தினம் அவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.
உண்ணா விரதம்
இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டின் முன்பு சபரிமாலா உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது கையில் கோரிக்கை பதாகையும், மாணவி அனிதாவின் படங்களும் வைத்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சபரிமாலாவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
போலீஸ் எச்சரிக்கை
இந்நிலையில், நீட் தொடர்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மாலையில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நீட் தொடர்பாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால் நீங்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் கைது செய்வோம் என்று தெரிவித்தார். இதையடுத்து சபரிமாலா தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.