ஜெ.வின் கமாண்டோக்களை திரும்ப பெற்றது ஏன்?- மத்திய அரசுக்கு ஓபிஎஸ் அணி அதிரடி கடிதம்!
ஜெயலிதாவின் கறுப்புபூனை படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம் என்ன என்று ஓபிஎஸ் அணி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மரணமடைந்து 100 நாட்களை எட்டப்போகும் நிலையிலும் சந்தேகங்களும் சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வந்த கறுப்புபூனை படை பாதுகாப்பு எப்போது திரும்பப் பெறப்பட்டது அதற்கான காரணம் என்ன என்று ஓபிஎஸ் அணி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு கறுப்பு பூனை படை பாதுகாப்பு இல்லாமல் இருந்த போது நிராயுதபாணியாக அவரை கொன்று விட்டார்கள் என்று ஓபிஎஸ் அணியின் பி.எச் பாண்டியன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அதே கேள்வியை, சந்தேகத்தை கடிதமாக கேட்டு ஓபிஎஸ் அணியினர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளனர்.
தேசிய பாதுகாப்புப் படையின் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை வைத்து, விருதுநகர் மாவட்ட (ஓபிஎஸ் அணி அதிமுக) பொறுப்பாளரும், சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.பாலகங்காதரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விகளைக் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

என்எஸ்ஜி பாதுகாப்பு
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, என்.எஸ்.ஜி., பாதுகாப்பு, அவர் இறந்து போகும் நிலை வரை இருந்தததா? அல்லது செப்டம்பர் 22 அன்று, இரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டதா?

ஏன் பாதுகாக்கவில்லை
பாதுகாப்பு, அவரது மறைவு வரை தொடர்ந்தது என்றால், என்ன காரணத்தால், செப்டம்பர் 22 முதல் அவர் மறைந்த டிசம்பர் 5 வரை பாதுகாப்பு பணியில் கறுப்புப் பூனைப் படையினர் ஈடுபடவில்லை?

உத்தரவிட்டது யார்?
செப்டம்பர் 22 முதல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்றால், அதற்கு உத்தரவிட்ட அலுவலரின் பெயரும், அவரது பதவியின் பெயரும், அந்த உத்தரவின் நகலும் தேவை.

காரணம் என்ன?
ஜெயலிதாவின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது உண்மையானால், அதற்கான காரணம் என்ன? என்று அந்தக் கடிதம் மூலம் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு தகுந்த பதில் கிடைத்தவுடன் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட, ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது.

மர்மம் அவிழும்
கறுப்புப் பூனை படை வாபஸ் ஆனது குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், மருத்துவமனையில் இருந்த போதும் எழாத சந்தேகங்கள் அவரது மரணத்திற்குப் பிறகும் பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது. மத்திய உள்துறை என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அனைவரின் கேள்வி.












Click it and Unblock the Notifications