'நீட்' அவலம்... இதையும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா?
-தங்கர் பச்சான்
நீட் (NEET) தேர்வின் மூலம் மிகப்பெரிய பாதாள குழியைத் தோண்டி, இனி நம் பிள்ளைகள் மருத்துவக் கல்வி பக்கமே வரமுடியாதபடி செய்துவிட்டார்கள். ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி தப்பித்து கொள்வது போலவே நம்முடைய அரசியல் கட்சிகள் இதிலும் நடந்து கொள்கின்றன.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சேர்த்து, இழந்தது அனைத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் வாய்த்தது. நம் அரசியல் கட்சிகள் செய்த தவறை உணர்ந்து மக்கள் நலன்தான் முக்கியம் என நினைத்திருந்தால் அனைவரும் சேர்ந்து தேர்தலைப் புறக்கணித்து எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி வேண்டியதைப் பெற்றிருக்க முடியும்.
இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க அனைத்துக் கட்சிகளும் ஒரே இடத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் போராடினால் உறுதியாக பலன் இருக்கும். இதனைச் செய்ய நம் கட்சிகளுக்கு பெரிய மனசு வேண்டுமே!
இனி ஒவ்வொரு கட்சியாக போராட்டத்தை அறிவிக்கலாம்! வரும் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மருத்துவர் அன்புமணி தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாநிலை போராட்டம் நடத்துகிறது. எங்கெல்லாம் இதற்காக அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தினாலும், எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் தவறாமல் பங்கேற்று எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.
அரசியல் கட்சிகள் போராடி பெற்றுத் தந்தால் அதை அனுபவிக்க மட்டுமே நாம் என்பது போல இதிலும் இருக்க வேண்டாம். என்றைக்குமே நம்முடைய தேவைகளுக்காக கூட சாலையில் இறங்கி போராட முன்வராத நாம், இதுவரை நீட் பிரச்சனைக்காகவும் ஒன்று சேரவில்லை என்பதையும் உணர வேண்டும். நமக்குத் தேவை நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
எந்தக்கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களித்துவிட்டு போங்கள். ஆனால் எந்தக்கட்சி இதற்காக போராட்டம் நடத்தினாலும் அதில் பங்கேற்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.
- அன்போடு
தங்கர் பச்சான்
திரைப்பட இயக்குநர்