வீரமணி பேட்டியில் சர்ச்சை.. பாண்டேவுக்கு எதிரான வழக்கில் வாதாடிய வக்கீல் தி.கவிலிருந்து டிஸ்மிஸ்!
சென்னை: பெரியாரை அவதூறாக பேசியதாக தந்தி டிவி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜரான வழக்கறிஞரை திராவிடர் கழகம் தனது அமைப்பை விட்டே நீக்கியுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை, தந்தி டிவியின் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, கடந்த ஆண்டு, நேர்காணல் செய்தார்.
அப்போது 'பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி' என்று பெரியார் சொன்னது சரியா என்ற ரீதியில் கேள்வியை முன் வைத்தார் பாண்டே.
மறுத்த வீரமணி
இதற்கு மறுப்பு தெரிவித்த வீரமணி, அதைப்போன்று பெரியார் கூறவேயில்லை என்று கூறினார். இதையடுத்து தந்தி டிவியில் மாற்றப்பட்ட காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், பெரியார் குறித்த குற்றச்சாட்டுக்கு பாண்டேவிடம், ஆதாரம் இருந்தால் தர வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால் இப்படியான மேற்கோளை ஊடகத்தில் சொன்னதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குமரவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் குமரவேல் தரப்பில் ஆஜராகி வாதாடினார், தி.க. சட்டத்துறை துணை செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன்.
நேரில் ஆஜர்
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து ரங்கராஜ் பாண்டே ஆறு முறை தடை உத்தரவு பெற்ற நிலையில், சென்ற மாதம் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேரில் ஆஜரானார்.
வக்கீல் நீக்கம்
இந்நிலையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் சட்டத்துறை துணை செயலாளர் ஆ. பாண்டியன் கழகத்தைவிட்டு நீக்கம் செய்வதாக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அறிவித்துள்ளார்.
வழக்கை வாபஸ் பெற கூறினர்
இதுகுறித்து பாண்டியன், ஊடகம் ஒன்றிடம் அளித்துள்ள பேட்டியில், நான் 40 வருடங்களாக கழகத்தில் இருக்கிறேன். வழக்கறிஞராகத்தான் இந்த வழக்கில் ஆஜரானேன். என்னிடம் வழக்கை திரும்பப் பெற சொன்னார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
வழக்கு தொடரும்
என்னிடம் மனுதாரர் இந்த வழக்கை ஒப்படைத்திருக்கிறார். வழக்கறிஞராக வழக்கை திரும்பப் பெறுவது அறமாகாது. ஒரு அமைப்பில் இருக்கும்போது அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் நீக்கத்தான் செய்வார். என்னுடைய நிலையும் தவறில்லை. அவர்களுடைய முடிவும் தவறில்லை. அவர்களுடைய நடவடிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாகவும், பாண்டியன் தெரிவித்துள்ளார்.