ஆட்டோ பிடிக்க போன தாய், மகள் சடங்குக்கு பத்திரிகை தர சென்ற தந்தை.. தூத்துக்குடியின் துயர பலிகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் விவரம்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரும் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஒரு புறம் இருக்க, அவர்களில் பலரும் அநியாயமான முறையில் உயிரை விட்டுள்ளனர் என்பதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது.

    ஆட்டோ பிடிக்கச் சென்ற பாவத்திற்காக ஜான்சி என்பவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை பிளக்ஸ் போர்டில் கட்டி தூக்கிச் சென்றுள்ளது காவல்துறை. இப்படி ஒவ்வொருவரின் கொலையும் பெரும் வேதனைக் கதையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள் இதுபோன்ற பல குடும்பங்களுக்கு மீளாத்துயரத்தை அளித்திருக்கிறது. அவர்களது வீடுகளுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினர். வெள்ளியன்று திரேஸ்புரம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்ட குழுவினருடன் அப்பகுதி மக்கள் காவல்துறையினரின் அராஜகம் குறித்து குமுறலுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி:

    20 வயது மாணவர்

    20 வயது மாணவர்

    எம்.கார்த்திக் (20). தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு மாணவர். தூத்துக்குடி மக்களின் வாழ்வாதார போராட்டத்தில் பங்கேற்று துப்பாக்கி குண்டு துளைத்து உயிரிழந்துள்ளார். இவரது தந்தை முத்துப்பாண்டி கறிக்கடை நடத்தி வருகிறார்.

    புது மாப்பிள்ளையின் கோர முடிவு

    புது மாப்பிள்ளையின் கோர முடிவு

    எஸ்.மணிராஜ் (34). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான பேச்சியம்மாள் கணவனின் துயர முடிவை தாங்க முடியாமல் பேச்சற்று நிற்கிறார். அவருக்கு ஆறுதல் கூறவும் திராணியற்றவர்களாக நிலைகுலைந்து நிற்கிறார்கள் மணிராஜின் தந்தை சவுந்தரபாண்டியனும், தாயார் பால்ஜானகியும். அவர்கள், பேச்சியம்மாளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    பிளஸ்டூ தேர்வு எழுதிய ஸ்னோலின்

    பிளஸ்டூ தேர்வு எழுதிய ஸ்னோலின்

    ஸ்னோலின் (18). 12 ஆம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுத டுட்டோரியலில் படித்து வந்தார். மணிசகாயபுரத்தைச் சேர்ந்த ஜாக்சன், வனிதா தம்பதியரின் மகளான இவர் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் போராட்டத்தில் பங்கேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றவர். தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தவர் திடீரென சுருண்டு விழுந்தார். அருகிலிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவரது வாய் வழியாக பாய்ந்த துப்பாக்கி குண்டு தலையை சிதறடித்தது. தங்கையின் சடலத்தை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அண்ணன் அகஸ்டின் காவல்துறையின் தடியடியில் படுகாயம் அடைந்து சிசிச்சை பெற்று வருவதை ஜாக்சன் தெரிவித்தார்.

    மீன்பிடி தொழிலாளர்

    மீன்பிடி தொழிலாளர்

    கே.கிளஸ்டன் (39) நாட்டுப்படகு மீன்பிடி தொழிலாளியான இவருக்கு தூத்துக்குடி மக்கள் நூறு நாட்களை தாண்டியும் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்க முடியாதது கவலையளித்துள்ளது. செவ்வாயன்று நடந்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என மனைவி ஜேசுராணியிடமும், மகன் ஜெனிஸ்டன் (18), மகள் ஜெமிமா (16) ஆகியோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். மீள முடியாத பிரியாவிடையாக துப்பாக்கியால் சுட்டு இப்படி வீழ்த்தி விட்டார்களே என்று பொங்கி வழிந்த கண்ணீருடன் கூறினார்கள்.

    22 வயது காளியப்பன்

    22 வயது காளியப்பன்

    காளியப்பன் (22) தனியார் நிறுவன தொழிலாளி. இவர் சொந்தமாக அண்ணாநகரில் வீடு கட்டி வருகிறார். மாப்பிள்ளையூரணியில் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சம்பள முன்பணம் வாங்குவதாக கூறிச் சென்றவனுக்கு இந்த போராட்டம் பற்றி எல்லாம் தெரியாது. இப்படி அநியாயத்துக்கு கொன்னுட்டாங்களே எனக் குமுறுகிறார் தந்தை கோபாலகிருஷ்ணன்.

    கப்பல் தொழிலாளி செல்வராஜ்

    கப்பல் தொழிலாளி செல்வராஜ்

    அந்தோணி செல்வராஜ் (45). தனியார் கப்பல் கம்பெனி தொழிலாளி. செவ்வாயன்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் 28 ஆம் தேதி நடக்கவிருக்கும், ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மகள் ஜெனிதல் அமிர்த ஷர்மிலியின் பூப்புனித நீராட்டு விழாவுக்கான அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்கச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டார். இவரது மகன் அஜய் ஜோன்ஸ் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், பிகாம் பட்டதாரியான மனைவி கல்பனாவுக்கு தூத்துக்குடியில் உள்ள ஏதேனும் அரசுடமை வங்கியில் வேலையும் வழங்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    பரிதாபத்துக்குரிய ஜான்சி

    பரிதாபத்துக்குரிய ஜான்சி

    தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி (47) ஆட்டோ பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மீனவரான இவரது கணவர் சேசுபாலன் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்டும் மனைவியை தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்தார். அக்கம் பக்கத்தினர் சொன்ன தகவல் அவரை மேலும் பதற்றமடையச் செய்தது. காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஒரு பெண்ணின் சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுருட்டிக் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையறிந்து துடித்துப்போனவர் தனது 4 குழந்தைகளுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அலைமோதியிருக்கிறார். கால்துறையின் கெடுபிடிகளைத்தாண்டி ஒருவழியாக பிணவறைக்கு சென்றவர் புடவை, வளையலைக் கொண்டு தனது மனைவியின் முகம் சிதைந்த சடலத்தை அடையாளம் கண்டு கதறினார். அவரது மகனும் 3 மகள்களும் அழுது புலம்பினர். அங்கிருந்த பலரும் இதுபோன்று தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் அங்கு யாருமில்லை.

    திரேஸ்புரத்தில் ஏன் துப்பாக்கிச் சூடு

    திரேஸ்புரத்தில் ஏன் துப்பாக்கிச் சூடு

    மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் பேரணியாக சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பதற்றத்தை பற்ற வைத்தனர் காவல்துறையினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொலைவில் உள்ள திரேஸ்புரத்தில் மாலையில் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பது தான் அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள் இதுபோன்ற பல குடும்பங்களுக்கு மீளாத்துயரத்தை அளித்திருக்கிறது.

    நன்றி: தீக்கதிர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+