கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.. தினகரனுக்குத்தான் ஆதரவுன்னு பொளேர்னு இவங்க சொல்லிரலாமே..!
தினகரனுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கூறி விடலாமே. எதற்காக சுற்றி வளைக்கின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை: தினகரனுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் நேரடியாக கூறாமல் எதற்காக சுற்றி வளைத்து பிறகு கூறுவோம் என்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அதிமுகவுடன் முக்குலத்தோர் புலிகள் படை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன. எனினும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
அதன்படி இரட்டை இலையில் போட்டியிட்டு மூவரும் வெற்றி பெற்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களின்போது சசிகலா பக்கம் நின்றனர். தற்போது பிரிந்திருந்த அணிகள் தற்போது ஒன்றிணைந்துள்ளன.
தினகரன் தரப்பு எதிர்ப்பு
ஓபிஎஸ் அணிக்கு துணை முதல்வர் பதவி, முக்கிய இலாகாக்கள் வழங்கியதற்கும், சசிகலாவை நீக்குவோம் என்று சொன்னதற்கும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
பெரும்பான்மை இல்லை
இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரின் ஆதரவு யாருக்கு என்பதில் குழப்பம் நிலவி வந்தது.
தனியாக ஆலோசனை
தினகரன்- எடப்பாடி- ஓபிஎஸ் மோதல் வலுப்பெற்று பஞ்சாயத்து தற்போது டெல்லிக்கு ஷிப்ட் ஆகியுள்ளது. இந்த நிலையில், இந்த மூன்று பேரும் இன்று எம்எல்ஏ விடுதியில் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது...
எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வரட்டும் அப்போது யாருக்கு ஆதரவு என்பதை சொல்கிறோம் என்று மூவரும் தெரிவித்தனர். பின்னர் சசிகலாவையும், தினகரனையும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசினர். அதேவேளையில் முதல்வர் எடப்பாடி அரசுக்கும் பேரறிவாளன் பரோல் விவகாரத்தில் நன்றி தெரிவித்தனர்.
பொளேர்னு சொல்லலாமே...
இவர்களது பேச்சை ஆற அமர உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் இவர்கள் தினகரன் அணிக்கே ஆதரவாக உள்ளனர் என்பது புரிய வருகிறது. ஆனால் அதை நேரடியாக சொல்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு கபடி ஆடுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. இவர்கள் மூவருமே முதல் முறையாக எம்எல்ஏ ஆனவர்கள். பாதியிலேயே எல்லாம் போய் விடக் கூடாது என்ற ஜாக்கிரதையுடன் காய் நகர்த்துகிறார்களோ என்னவோ என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.