தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்!
தேவக்கோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் கே ஆர் ராமசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது.
பொதுவாக அரசியல் கட்சி என்றாலே அதிலும் தேசிய கட்சிகளின் தலைமை டெல்லியில் இருப்பதால் மாநிலங்களில் உள்ள அக்கட்சியினரிடையே கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் மூத்த முக்கிய தலைவர்களுக்கென தனித்தனி ஆதரவாளர்கள் இருப்பர்.
இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்படும். கட்சி தலைமையிடம் ரிப்போர்ட் போகும். ஆனாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் மோதலில்தான் ஈடுபடுவார்கள். அண்மையில் மானாமதுரையிலும் இது போல் மோதல் சம்பவம் நடந்துள்ளது.

10 நாட்கள்
மானாமதுரையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வெள்ளிக்குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு பேசினார். அவர் மானாமதுரையில் கட்சி வளரவில்லை. இதற்கு தற்போதுள்ள நிர்வாகிகள்தான் காரணம். அவர்களை மாற்ற வேண்டும். பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்றார்.

ப சிதம்பரம் அனுமதிக்கவில்லை
பின்னர் அவரை ப சிதம்பரம் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் புகார் அளிப்பேன் என பாண்டிவேலு தெரிவித்ததற்கு தாராளமாக சொல்லுங்கள் என ப சிதம்பரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது ப சிதம்பரத்திற்கும் பாண்டி வேலுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம்
இந்த நிலையில் இது போன்றதொரு சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் தேவக்கோட்டையில் கண்ணன்குடி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேவக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள்
இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தொகுதி எம்எல்ஏ தன்னிச்சையாக செயல்படுகிறார். தேவக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல் செய்வதே கிடையாது. தேர்தல் என்றவுடன் வருகிறார் என குற்றம்சாட்டினர். அப்போது கார்த்தி சிதம்பரம் சமரசம் செய்ய முயற்சித்தார். கே.ஆர். ராமசாமியும் சமரசம் செய்ய முயன்றார். இருந்தாலும் இருபிரிவினரும் வாக்குவாதம் செய்தனர். நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீஸார் வந்து அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications