செல்போன் கடையில் திருட்டு... திருடனை போலீசில் மாட்ட வைத்த ‘வெள்ளைக் கவர்’!
செல்போன் கடையில் திருடிய நபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கன்னியாகுமரி : வெள்ளை நிற பாலீதீன் பையை தலையில் மாட்டிக் கொண்டு வந்து செல்போன் கடையில் திருடிய நபரை கன்னியாகுமரிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலும் திருடர்கள் தங்களது முகம் திருட்டுச் சம்பவத்தின் போது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக முகத்தை துணி கொண்டு மறைத்து விடுவார்கள் என்பதை நாம் செய்திகள் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால், திருட்டின் போது தன் முகத்தை மறைக்க வேண்டும் என நினைத்து, ஏமாந்து போலீசில் வசமாகச் சிக்கியுள்ளார் இளைஞர் ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் சஜின் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது கடையில் திருட்டுப் போனது. கடையில் பூட்டை உடைத்து ரூ. 47 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போனதாக சஜின் போலீசில் புகார் தெரிவித்தார்.
சஜினின் புகாரைத் தொடர்ந்து, அவரது கடை வாசலில் இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர் பாலீதீன் கவரால் முகத்தை மூடியபடிச் சென்று, சஜின் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களைக் கொள்ளையடித்தக் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதில், குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட திருடனின் அறியாமை தான். மற்றவர்களுக்கு தன் முகம் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என வெள்ளை நிற பாலீதீன் கவரை தலையில் மாட்டி, தட்டுத்தடுமாறி கடையில் கொள்ளையடிக்கச் சென்றுள்ளார் அந்த இளைஞர். ஆனால், அங்கிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவரது வெள்ளை நிற பாலீதீன் கவரில் ஒளி ஊடுருவி அவரது முகம் அப்பட்டமாக வெளியில் தெரிந்து விட்டது.
இதனால் போலீசார் அதிகம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லாமல், அத்திருடனின் போட்டோவை வைத்து திருட்டு நடந்த சில மணி நேரங்களிலேயே அவரைக் கைது செய்துள்ளனர்.