களைகட்டும் திருப்பரங்குன்றம்.... கந்தசாமி ஸ்டைலில் ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர் கரையேறுவாரா?
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் கந்தசாமி பட பாணியில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.
திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் இடைத்தேர்தல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வரும் 19 தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் என பல கட்சியினர் இருந்தாலும் திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி. தொகுதியில் பிரச்சார களம் களைகட்டி வருகிறது.
திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனை அறிவித்ததில் இருந்தே தொகுதியில் அதிருப்தி நிலவுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. பிரச்சாரத்தை சில தினங்கள் தாமதமாகவே தொடங்கினார் சரவணன் எனினும் புது பாணியில் வாக்கு சேகரிக்கிறார்.
கந்தசாமி பட சினிமா பாணியில் சேவல் வேடம் போட வைத்து வாக்கு சேகரிக்கிறார் திமுக வேட்பாளர் சரவணன். என்னதான் வாக்காளர்களை கவர திமுக வேட்பாளர் முயற்சி செய்தாலும் மாவட்ட செயலாளர்களின் மல்லுக்கட்டு வேட்பாளர் சரவணனுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பேசிக்கொள்கின்றனர்.
முட்டல், மோதல்
திமுகவில் சமீபகாலமாக மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, தளபதி ஆகியோரிடையே ஒருவருக்கொருவர் குறை சொல்லும்போக்கு அதிகரித்து, விரோதமாக வளர்ந்து வருகிறது. திமுக வேட்பாளராக சரவணனை அறிவிக்க மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் பணம் பெற்றதாக எம்எல்ஏ ஒருவரிடம் தளபதி குற்றம் சாட்டி பேசியுள்ளார். இதைக் குறிப்பிட்ட அந்த எம்எல்ஏ ஐ.பெரியசாமியிடம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் குற்றச்சாட்டு
கடந்த திங்கட்கிழமையன்று பிரதமை நாளில் வேட்புமனு தாக்கல் செய்தார் சரவணன். வேட்புமனு தாக்கல் முடிந்ததும், பெரியசாமி முன்னிலையில் தளபதியின் குற்றச்சாட்டு குறித்து மூர்த்தியிடம் குறிப்பிட்ட எம்எல்ஏ விசாரித்துள்ளார். இது மூர்த்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
தளபதியின் கோபம்
தேர்தல் பணி தொடர்பாக அப்போது ஐ.பெரியசாமியிடம் தளபதி முறையிட்டார். அப்போது அருகிலிருந்த மூர்த்தி, ஏதாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க, நீங்க புறப்படுங்க என்று பெரியசாமியிடம் கூறவே, தனது கோரிக்கையை பெரியசாமி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தன்னை அவமரியாதை செய்யும் வகையில் மூர்த்தி நடந்து கொண்டதாகக் கருதி தளபதி கோபமடைந்தார்.
தள்ளுமுள்ளு
இதை கவனித்த தளபதியின் ஆதரவாளர் ஒருவர் பெரியசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூர்த்தி, கடுமையாக திட்டினார். அவருக்கு ஆதரவாக மணிமாறன், அவனியாபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் தளபதியின் ஆதரவாளரை நோக்கி பாய, அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த நாளில் தொடங்கிய மோதல் இன்னும் அடங்கிய பாடாக இல்லையாம்.
பிரச்சாரத்தை மாற்றிய சரவணன்
இது தேர்தல் பணியிலும் எதிரொலிப்பதால், கட்சிக்காரர்களை நம்புவதை விட வாக்காளர்கள் நம்புவது மேல் என்று பல வித டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் சரவணன். இவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் போது அவருடன் கந்தசாமி திரைப்படத்தில் விக்ரம் சேவல் வேடமணிந்து வருவது போல, மதுரையை சேர்ந்த ஒரு மேடைக்கலைஞரை வேடமணிய வைத்து, அவரையும் தன்னுடன் அழைத்து செல்கிறார்.
கந்தசாமி சேவல்
அவரும் கறுப்பு சிவப்பு நிறத்தில் சேவல் போல உடையணிந்து, திமுக வேட்பாளர் சரவணன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சேவல் இறக்கையை விரித்து கொக்கரித்து வாக்காளர்களிடம் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த சேவல் கெட் அப் வாக்கு சேகரிப்பு வாக்காளர்களை ரொம்பவே கவர்கிறது என்றாலும் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் திமுக மாவட்ட செயலாளர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தேர்தல் பணியில் சுணக்கம் காணப்படுவதாகவே கூறப்படுகிறது.
பணத்திற்கு ஓட்டு போடாதீர்கள்
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள். அப்புறம் அவர்களிடம் போய் தொகுதிக்கு தேவையானதை கேட்டு வாங்க முடியாது எனவே வேட்பாளர் யார்? தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் என்று பார்த்து ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரத்தில் பேசி வருகிறார் டாக்டர் சரவணன். கோஷ்டி மோதலில் இருந்து மீண்டு ஜெயிப்பாரா சரவணன் என்பதுதான் இப்போது திமுகவினரிடையே பேச்சாக உள்ளது.
முகாமிட்ட அமைச்சர்கள்
திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிக்காக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் களமிறங்கி வருகின்றனர். திருப்பரங்குன்றம் எம்ஜிஆரின் கோட்டை வெற்றிக்கனியை பறிப்போம் என்று கூறி பம்பரமாக சுழன்று வாக்காளர்களை கவனித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் அதிமுக வசமாகுமா? நவம்பர் 19ல் தெரியும்.