தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: மேலும் 2 நாட்களுக்கு நீடிக்குமாம் - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் திருவண்ணாமலை, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்றும் இரு வாரங்கள் உள்ள நிலையில் அனலாய் வெயில் தகிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரப்பதம் குறைந்த காற்று வீசுவதால், தமிழக உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். திருவண்ணாமலை, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனக் கூறினார்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதுரை, மற்றும் தருமபுரியை பொருத்தவரை அம்மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.