காசு, பணம், துட்டு, மணி மணி: அதிமுகவை ஆக்டோபஸ் மாதிரி சுற்றி நெருக்கும் பாஜகவின் திட்டம் இதுவே!
அதிமுகவையும், அதிமுக ஆட்சியையும் பாஜக நெருக்கி வருவதற்கு முக்கியக் காரணம், லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அதிமுகவிடம் உள்ள எம்.பிக்கள் பலம்.
சென்னை: அதிமுகவை தனது கிளைகளில் ஒன்றாக மாற்றுவதே பாஜகவின் முக்கிய நோக்கம் என்று டெல்லி வட்டார நாடித் துடிப்பை அறிந்தவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
அதிமுக மற்றும் ஆட்சியை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது, அதற்காக அதிமுக தலைமையையும், ஆட்சியையும் தனது பிடியில் வைத்திருக்கவே ரெய்டுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது மத்திய அரசு என்பது அவர்கள் கூறும் தகவல்.
தனக்கு சாதகமான முறையில் தமிழக ஆட்சியையும், தமிழகத்தின் ஆளுங்கட்சியையும் வளைப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் தனக்கு தேவையானதை சாதித்துக் கொள்வதும், நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர் வரப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலை புது பலத்துடன் சந்திப்பதுமே பாஜகவின் திட்டமாக கூறப்படுகிறது.
எம்.பிக்கள் கணக்கு
பாஜகவின்முக்கிய இலக்கு அதிமுகவிடம் குவிந்து கிடக்கும் எம்.பிக்கள்தான். லோக்சபாவில் அதிமுகதான் 3வது பெரிய கட்சி. மொத்தம் 37 எம்.பிக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் உள்ளனர். அதில் 12 பேர் அதிமுக. 13வது நபர் அதிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா.
அப்படியே வர வேண்டும்
பாஜகவின் கணக்கு என்னவென்றால் இந்த 49 பேரும் (சசிகலா புஷ்பா தவிர்த்து - அவர் ஏற்கனவே பாஜக ஆதரவில்தான் உள்ளார்) பாஜக சொல்வதை மட்டுமே நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். ஓட்டுப் போடு என்றால் போட வேண்டும். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. கிட்டத்தட்ட நிபந்தனையற்ற சரண்டர் கதைதான்.
ராஜ்யசபாவில் மைனாரிட்டி
பாஜக லோக்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தாலும், ராஜ்யசபாவில் அது மைனாரிட்டிதான். சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற ஒவ்வொரு கட்சியிடமும் அது கெஞ்சிக் கொண்டுள்ளது. அதிமுகவின் 13 பேரும் அப்படியே அவர்களது வசம் வந்தால் கெஞ்சும் வேலை சற்று குறையும் பாஜகவுக்கு. இதை சாதிக்க சசிகலா நடராஜனையும், அதிமுக ஆட்சியையும் தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. அதைத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அது செய்ய ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள்.
மீறிப் போனால் ரெய்டு
பாஜகவுக்கு கட்டுப்படத் தவறினால், முரண்டு பிடித்தால், முக்கி முனகினால் என்ன நடக்கும் என்றால் அதிமுக தலைவர்களும், அமைச்சர்களும் பற்பல இடங்களில், நபர்களிடம் குவித்து வைத்திருக்கும் பணத்தைப் பிடுங்குவார்கள். அதுதான் வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளின் பின்னணி என்கிறார்கள். இது வெறும் டிரைலர் தான். ஒத்து வர முடியுமா முடியாதா. ஒத்து வந்தால் அப்படியே நீடிக்கலாம். முடியாவிட்டால் எல்லாவற்றையும் பறி கொடுக்க வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம். இதைத்தான் அது திட்டமிட்டு செய்து வருவதாக சொல்கிறார்கள்.
சசிகலா .. ஓ.பன்னீர் செல்வம்
சசிகலாவும் சரி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சரி இருவருமே காசு, பணம், துட்டு, மணி மணி விஷயத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் உள்ளனர். இதனால் இருவரும் வேறு வழியில்லாமல் பாஜகவுக்கு பணிந்து போக வேண்டிய பெரும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர். நாலரை ஆண்டு காலத்தை கழிக்க வேண்டும் என்றால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.
இப்போதைய நிலையில் பாஜகவை எதிர்த்தோ அல்லது தவிர்த்தோ செயல்படும் நிலையில் சசிகலாவும் சரி, அதிமுக ஆட்சியும் சரி இல்லை. காரணம், குவிந்து கிடக்கும் ஊழல்களும், பணக் குவிப்பும். எனவே பாஜகவின் இந்த சுற்றி வளைப்புக்கு அவர்கள் பணிந்து போயே ஆக வேண்டும்.
மக்களும் "தப்ப" முடியாது!
பாஜகவின் கணக்குக்கு மக்களிடம் என்ன மாதிரியான பதில் கிடைக்கும் என்பதை அறிய நாமும் நாலரை வருடம் இவர்களின் அரசியலை வேடிக்கை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.. பார்க்கலாம்!