கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
பழநி: கொடைக்கானல் தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதில் கணவரைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவரது சகோதரர் மணிகண்டன். இவர்களது நிலத்தில் சுப்பிரமணி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை மணிகண்டன் தனக்கு வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி, வீடு கட்டுவதற்குச் செலவான ரூ. 7 லட்சத்தைக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், சுப்பிரமணியின் குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுப்பிரமணி, அவரது மனைவி கௌசல்யா (34), மகள்கள் ஜனனி (17), இலக்கியா (14) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் பேருந்து நிலையம் பின்புறம் பிலிஸ்விலா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கினர்.
திங்கள்கிழமை இரவு சுப்பிரமணி, தான் வைத்திருந்த விஷ மருந்தை குளிர்பானத்தில் கலந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திடீரென சுப்பிரமணி தங்கியிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து, விடுதியில் இருந்தவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே கௌசல்யா மற்றும் மகள்கள் ஜனனி, இலக்கியா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இறந்த ஜனனியின் கையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், எங்களது வீட்டை அபகரித்து, பணமும் கொடுக்காமல் ஏமாற்றிய சித்தப்பா மணிகண்டன்தான் எங்களது சாவுக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர். கடிதத்தைக் கொடைக்கானல் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.