வெயிலில் "நனைந்து".. மழையால் குளிர்ந்த மக்கள்.. கள்ளக்குறிச்சியில் குதூகல கிளைமேட்!
சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து மக்கள் கடும் அவதியில் இருக்கும் போது குளு குளு மழை பெய்து கள்ளக்குறிச்சி மக்களை குளிர்வித்துள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்பாளையம் ஆகிய இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கடந்த மார்ச் 3ம் தேதியில் இருந்து சில தினங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து வட மாவட்டங்களிலும் சில இடங்களில் மழைபெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயில் அதிரடியாக அடித்து பிளக்கத் தொடங்கியது.
இடியுடன் மழை..
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்பாளையம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த 5 நாட்களுக்கு எப்படி..
தற்போது கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை என்று தெரிவித்துள்ள வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், கோடையையொட்டி அடுத்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
கோடை மழை
மேலும், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை மழை என்று அழைக்கப்படும் இது மக்களை ஒரு சில நாட்கள் மகிழ்வித்து சென்று விடும்.
மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதால் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 5 நாட்களுக்கும் மழை இல்லை என்றாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.