வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மதுரை: ‘மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வெடிக்கும்‘ என வெளிநாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு வரும் பெண் பக்தர்களை பெண் போலீசாரும், ஆண் பக்தர்களை ஆண் போலீசாரும் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வெடிக்கும்‘ என மிரட்டல் வாசகம் இருந்தது.
இந்தத் தகவல் உடனடியாக மதுரை போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை போலீசாரின் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது.
தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெளிவீதிகளில் அமைந்துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வீதம் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில் நிலையத்திலும் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.