திடீர் என கேட்டை பூட்டி போராட்டத்தில் குதித்த நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் சோலார் விளக்கை உடைத்ததற்கு அபராதம் விதித்ததை கண்டித்து விடுதி மாணவர்கள் கல்லூரி வளாக கதவை அடைத்து போராட்டம் நடத்தினர்.
நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் விலை உயர்ந்த நான்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் சமீபத்தில் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை கண்டித்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் விடுதி மட்டும் மூடப்படுவதாகவும், அபராத தொகை ரத்து செய்யப்படுவதாகவும் கூறி அன்று மாலையே விடுதி மூடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அபராத தொகை ரூ.500 மட்டும் குறைக்கப்பட்டதாகவும், அபராத தொகையை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நிர்வாகம் கல்லூரி விடுதியை திறந்துவிட்டது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்படியும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் நேற்று மாலை கல்லூரி கேட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டு கல்லூரி உள்ளே அமர்ந்து கொண்டனர். கேட் முன் அறிவிப்பு இல்லாமல் பூட்டப்பட்டதால் உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்ல முடியவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளை உதவி கமிஷனர் செல்வம் மற்றும் பெருமாள்புரம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அபராத தொகை முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு விடுதியில் வழக்கம் போல் உணவு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.